அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் பயணம்!

இஸ்ரேல் – ஹமாஸ் போர் இதுவரை இல்லாத அளவுக்கு மிகுந்த வீரியத்துடன் நடந்துவரும் சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை (புதன்கிழமை) இஸ்ரேல் செல்கிறார். இதனால், இஸ்ரேல் திட்டமிட்டுள்ள தீவிர தரைவழித் தாக்குதல் நிறுத்தப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதனை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்ரேல் பயணத்துக்காக ஏற்கெனவே திட்டமிட்டிருந்த கொலராடோ பயணத்தை பைடன் ஒத்திவைத்துள்ளார்.

“இஸ்ரேலில் கொடூர தாக்குதல்களை நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். அதேநேரம் பாலஸ்தீன மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது. இது மாபெரும் தவறாகிவிடும்’’ என்று எச்சரிக்கை விடுத்திருந்ததைத் தொடர்ந்து அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் செல்லவிருக்கிறார். அவரது இஸ்ரேல் பயணம் சர்வதேச கவனம் பெற்றுள்ளது.

கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதி மீது தரை, கடல், வான் வழியாக தாக்குதல் நடத்தினர். அன்றைய தினம்இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. சுமார் 1,200 ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் நுழைந்து ஏராளமான இஸ்ரேலியர்களை சுட்டுக்கொன்றனர். பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து ஹமாஸ் போராளிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே 11வது நாளாக போர் நடக்கும் சூழலில் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 2,808 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,859 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 254 பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 64 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். அதேபோல டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் உட்பட 37 மருத்துவ ஊழியர்கள் இறந்துள்ளனர்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் 141 சதுர மைல் (365 சதுர கிலோமீட்டர்) பரப்பளவில் உள்ள பகுதியில் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் முனைப்புடன் முன்னேறி வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலும் அழிக்கும் முயற்சியாக இதனை இஸ்ரேல் கருதுகிறது. இந்தச் சூழலில்தான் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளின்கன் அதிபர் பைடன் இஸ்ரேல் செல்வதை உறுதி செய்துள்ளார். இதனால் பேரழிவை ஏற்படுத்தும் தரைவழித் தாக்குதல் தவிர்க்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் களமிறங்குவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று 2000 வீரர்களுக்கு அமெரிக்க ராணுவம் உத்தரவிட்டு உள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு பதிலடி கொடுக்க தயாராக இருக்க சுமார் 2,000 அமெரிக்க வீரரக்ளுக்கு பென்டகன் “களமிறங்க தயார் ஆகுங்கள்” என்ற உத்தரவை அனுப்பியுள்ளது. அமெரிக்க அதிபர் பிடனின் உத்தரவின் பெயரில் இந்த உத்தரவு சென்றுள்ளது. போர் உச்சம் அடைந்து உள்ள நிலையில் இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டு உள்ளது. இதனால் போரில் அமெரிக்கா நேரடியாக தலையிடுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இஸ்ரேல் படைகளுக்கு கூடுதல் மருத்துவ உதவி அல்லது வெடிகுண்டு உதவி, ஆயுத உதவி போன்ற பல்வேறு உதவிகளை அமெரிக்க படை வீரரக்ள் வழங்குவார்கள். நேரடி பாதுகாப்பு, தாக்குதல் பணிகள், பல்வேறு இடங்களை பிடிப்பது உள்ளிட்ட பணிகளிலும் இஸ்ரேலுக்கு அமெரிக்க படைகள் ஆதரவாக இருக்கும் .. இஸ்ரேலுக்கு மட்டுமின்றி காசா, சிரியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கும் கூட இவர்கள் அனுப்பப்பட வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அங்கே படைகளை குவித்து இஸ்ரேலுக்கு போரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவும் வகையில் அமெரிக்கா செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை போரில் அமெரிக்கா கப்பலை அனுப்பி இருந்தாலும் நேரடியாக எந்த ஆக்சனும் எடுக்கவில்லை.

உதாரணமாக அமெரிக்கா பாதுகாப்பு படையின் ராட்சசன் என்று அழைக்கப்படும் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு போர் கப்பல் மத்திய கிழக்கில் கால் பதித்து உள்ளது. இஸ்ரேலுக்கு உதவ உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலும் சில சிறந்த அமெரிக்க போர் விமானங்களும் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது மத்திய கிழக்கு நாடுகளின் கடல் பகுதிக்குள் இந்த கப்பல் நுழைந்து உள்ளது. இதனால் போர் தற்போது அமெரிக்கா vs பாலஸ்தீனம், ஈரான் உட்பட இஸ்லாமிய நாடுகளுக்கு இடையிலான போராக உருவெடுக்கும் என்கிறார்கள். அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு (சிவிஎன்-78), டிகோண்டெரோகா ஏவுகணை கப்பல் யுஎஸ்எஸ் நார்மண்டி (சிஜி 60), அத்துடன் ஆர்லீ-பர்க் கிளாஸ் ஏவுகணை, யுஎஸ்எஸ் தாமஸ் ஹட்னர் (டிடிஜி 116), யுஎஸ்எஸ் ராமேஜ் (டிடிஜி 61), யுஎஸ்எஸ் கார்னி (டிடிஜி 64), மற்றும் யுஎஸ்எஸ் ரூஸ்வெல்ட் (டிடிஜி 80) ஆகிய போர் கப்பல்கள், போர் விமானங்கள் களமிறக்கப்பட்டு உள்ளன. மத்திய கிழக்கு; யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு அமெரிக்காவின் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட விமானம் தாங்கி கப்பலாக பரவலாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 1,092 அடி (333 மீட்டர்) நீளமும், அதன் விமான தளத்தில் 256 அடி (78 மீட்டர்) அகலமும் மற்றும் 250 அடி (76 மீட்டர்) உயரமும் கொண்ட உலகின் மிகப்பெரிய கப்பலாகும். இதில் 3000 வீரர்கள் குறைந்த பட்சம் இருக்க முடியும். 10 ஆயிரம் வீரர்களை கூட கொண்டு செல்ல முடியும். 25 போர் விமானங்களை கொண்டு செல்ல முடியும். இந்த கப்பல் மத்திய கிழக்கிற்கு சென்றாலும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆனால் இப்போது படைகளை களமிறங்க ரெடியாகி இருக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறி உள்ளதால் போர் உண்மையில் உலகப்போராக மாற உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.