போலி பிறப்பு சான்றிதழ் வழக்கு: சமாஜ்வாடி தலைவர் அசம்கானுக்கு 7 ஆண்டு சிறை!

போலி பிறப்பு சான்றிதழ் பெற்ற வழக்கில் சமாஜ்வாடி தலைவர் அசம்கான், தசீன் பாத்திமா, அப்துல்லா அசம் ஆகிய 3 பேருக்கும் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசம்கான் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று உள்ளார். இவர் தனது மகன் அப்துல்லா அசம் தேர்தலில் போட்டியிடுவதற்காக போலி பிறப்பு சான்றிதழ் பெற்றதாக அவர் மீதும், மனைவி தசீன் பாத்திமா, மகன் அப்துல்லா அசம் ஆகியோர் மீதும் ராம்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

கடந்த 2019-ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சோபித் பன்சால், அசம்கான், தசீன் பாத்திமா, அப்துல்லா அசம் ஆகிய 3 பேருக்கும் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் உடனடியாக காவலில் எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.