மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவு!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் காலமானார்.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. இது இந்த ஊரின் அடையாளமாக உள்ளது. இந்த சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார். இவர், மேல்மருவத்தூரைச் சேர்ந்த விவசாயிகளான கோபால் மற்றும் மீனாம்பிகை அம்மையாருக்கும் மகனாக கடந்த 3-3-1941-ல் பிறந்தாா். பங்காரு என்றால் தெலுங்கு மொழியில் ‘தங்கம்’ என்று பொருள். இவர், ஆசிரியராக பணிபுரிந்தவரும்கூட. ஆசிரியர் பணியில் இருந்தபோது உத்தரமேரூரைச் சோ்ந்த பள்ளி ஆசிரியையான லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டாா். 1970-களின் தொடக்கம் முதல் சக்தி பீடத்தை நிறுவி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லிவந்தார். ஆன்மிகத்துடன் சமுதாய தொண்டையும் செய்துவந்த இவர், 1978-ல் முதன்முதலாக காஞ்சிபுரத்தில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தைத் தொடக்கி வைத்தார். இன்றுவரை 2,500-க்கும் மேற்பட்ட வார வழிபாட்டு மன்றங்களும், 25-க்கும் மேற்பட்ட சக்தி பீடங்களும் மேல்மருவத்தூர் சித்தா் பீடத்துக்கு தொண்டாற்றி வருகின்றன.

பங்காரு அடிகளாரை பின்பற்றுபவர்களும் ஆதிபராசக்தி கோயிலின் பக்தர்களும் அவரை ‘அம்மா’ என்று அழைத்து வந்தனர். 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இவரை பின்பற்றுபவர்கள் உள்ளனர் என்று சொல்லப்படுகிறது. மேல்மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார்.

அவரது மறைவு குறித்து பிரபல ஜோதிடர் ஷெல்வி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசி உள்ள அவர், ஐயா அவர்கள் ஆன்மீகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர். பாமர மக்கள் கூட அம்மன் சன்னிதானத்தில் சென்று வழிபாடு நடத்தலாம் என்ற புரட்சியை உண்டு செய்தவர். மாதவிடாய் காலத்தில் கூட பெண்கள் தெய்வத்திற்கு உண்டான சேவைகளை செய்யலாம்; அதனால் சக்தி ஒன்றும் போய்விடாது என்ற தத்துவத்தை உலகத்திற்கு சொன்னவர் ஐயா பங்காரு அடிகள். சபரிமலைக்கு எப்படி இருமுடி கட்டி வருகிறார்களோ அதுபோல் பங்காரு அடிகளாரின் ஆதி பராசக்தி பீடத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் வருவது ஆன்மீகத்தில் அவர் செய்த புரட்சியாக பார்க்கப்படுகிறது என கூறி உள்ளார்.

பங்காரு அடிகளார் ஆற்றிய சேவைக்காக மத்திய அரசு அவருக்கு 2019-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.