புதுவை அமைச்சர் சந்திரபிரியங்கா நீக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

புதுவை போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள சந்திரபிரியங்காவின் பதவி நீக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நெடுங்குணம் என்ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ சந்திர பிரியங்கா. இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளாவார். சந்திர பிரியங்கா புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 10 ஆம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதுகுறித்து தனது ராஜினாமா கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

என்னைச் சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கியுள்ள நிலையில் நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். ஒரு எம்எல்ஏவாக மாநில அமைச்சராக என் பணியை மன திருப்தியுடனும் மக்களின் ஆதரவுடனும் இந்த நிமிடம் வரை ஓயாமல் செய்து வருகிறேன். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்தும் பெண்களும் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள், ஆனால் கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் இதைப்பற்றி கவலைப்படாமல் களத்தில் நீந்தலாம் என்பதற்கான பல முன்னுதாரணங்கள் வரலாற்றில் உள்ளதை பார்த்து களமிறங்கி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு இரவு பகல் என ஓடி ஓடி உழைத்து வருகிறேன்.

மக்கள் செல்வாக்கு மூலம் மன்றம் நுழைந்தாலும் சூழ்ச்சி அரசியலிலும் பணம் என்ற பெரிய பூதத்தின் முன்னும் போராடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். தலித் பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது. தொடர்ந்து ஜாதிய ரீதியிலும் பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன். சொந்த பிரச்சினைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதல் நாகரீகமல்ல. ஆனால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் பொறுத்துக் கொள்ள இயலாதல்லவா. கண்மூடித்தனமாக அமைச்சராக என் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு நான் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் என் துறைகளில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் சீர்பாடுகள் செய்துள்ளேன் என்பதை விரைவில் பட்டியலாக சமர்ப்பிக்கிறேன் என உறுதியளிக்கிறேன்.

என்னை சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்த மக்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். இதற்காக எனது தொகுதி மக்களிடம் மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். மேலும் என் மக்களுக்கு சட்டசபை உறுப்பினராக பணியை தொடர்ந்து ஆற்றுவேன் என உறுதியளிக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவருக்கு எனது ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கிறேன். புதுவையில் பெரும்பான்மையாக உள்ள இரு சமூகங்கள் வன்னியர் மற்றும் தலித். இச் சமூகங்களில் இருந்து வந்துள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் தம் மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகிறார்கள். அந்த சமூகங்கள் மேலும் மேம்பட்ட காழ்ப்புணர்ச்சியில்லாத அரசியலை உறுதி செய்ய காலியாகும் என் அமைச்சர் பதவியை வன்னியர், தலித் அல்லது சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏவுக்கு அளித்து நியாயம் செய்ய வேண்டும். மக்கள் பின்புலம் இல்லாவிட்டாலும் பணத்திமிரினாலும் அதிகார மட்டத்தில் உள்ள செல்வாக்கினாலும் பதவிக்கு வந்துவிட துடிப்பவர்களுக்கு இந்த பதவியை கொடுத்து பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தலித் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம். எனக்கு வாக்களித்து என்னை எம்எல்ஏவாக்கி அரசுக்கு முழு ஆதரவு அளித்து வரும் என் மக்களுக்கு எவ்வித இடைஞ்சலும் அளிக்காமல் தாழ்த்தப்பட்ட தொகுதியான என் நெடுங்காடு தொகுதிக்கு மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் சந்திரபிரியங்கா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது:-

சந்திரபிரியங்காவின் செயல்பாடுகள் சரியில்லை என்பதால் அவரை நீக்க வேண்டும் என புதுவை முதல்வர் ரங்கசாமி பரிந்துரை செய்தார். ஆனால் நான்தான் உங்கள் அமைச்சரவையில் இருக்கும் ஒரே பெண் என்பதால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றேன். ஆனாலும் அவர் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் முதல்வரும் 6 மாதம் டைம் கொடுத்தும் முன்னேற்றம் இல்லை, எனவே அவரை நீக்குமாறு பரிந்துரைத்தார். புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் துணை நிலை ஆளுநரால் பதவி நீக்கத்தை ஒப்புதல் அளிக்க முடியாது. அதனால் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளேன். அவர்கள்தான் முடிவு செய்வார்கள். முதல்வர் தன்னை நீக்க பரிந்துரைத்ததை அறிந்தே சந்திரபிரியங்கா ராஜினாமா செய்தார் என தமிழிசை தெரிவித்தார். இந்த நிலையில் புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்காவின் பதவி நீக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.