அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் போப் பிரான்சிஸ் பேச்சு வார்த்தை!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் போப் பிரான்சிஸ் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 18வது நாளாக நீடித்து வருகிறது.

போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன், போப் பிரான்சிஸ் தொலைபேசி வாயிலாக பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் செய்வதற்கான முயற்சி எடுக்குமாறு போப் வலியுறுத்தினார். உலகம் அமைதியை நோக்கி திரும்புவதற்கான கூட்டு முயற்சி எடுக்கவும் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 27-ஆம் தேதி உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்த போப் பிரான்சிஸ் திட்டமிட்டுள்ளார் என்றும் ஜோ பைடனைத்தொடர்ந்து ஐரோப்பிய அரபு தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் வாடிகன் தேவாலயம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் அமைதியுடன் வாழ தகுதியானவர்கள் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “எவ்வளவு கடினமாக இருந்தாலும், நாம் சமாதானத்தை விட்டுக்கொடுக்க முடியாது. இரு நாடுகளின் தீர்வை நாம் கைவிட முடியாது. இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் சமமாக பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் அமைதியுடன் வாழ தகுதியானவர்கள்” என்று அதில் ஜோ பைடன் பதிவிட்டுள்ளார்.