வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் வாழ்த்து!

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்திற்காக மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துக்கள். ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் T63 போட்டியில் வெள்ளிப் பதக்கம், அவரது அசாத்தியமான திறமைக்கும் உறுதிக்கும் ஒரு சான்றாகும். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள நமது மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.