இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது பாட்டில் வீச்சு: 4 பேர் கைது!

தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பாட்டில் , கற்கள் போன்ற பொருட்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர்.

சென்னை தி. நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் மர்ம நபர்கள் பாட்டில் , கற்கள் போன்ற பொருட்களை வீசியுள்ளனர். அந்த சமயம் கட்சி அலுவலகத்திற்குள் யாரும் இல்லாத காரணத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மாநில தலைமை அலுவலகம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து கட்சி நிர்வாகிகள் மாம்பழம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி, சம்பவம் நடந்த சமயத்தில் யாரும் இல்லாத காரணத்தால் எந்த பாதிப்பும் இல்லை. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணிநேரமும் காவல்துறை பாதுகாப்பு அளித்து, இங்கே இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் தாக்குதல் நடத்தியது தொடர்பாக தி.நகரை சேர்ந்த அலெக்ஸ், பாரதி, அருண்குமார், பார்த்திபன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மது போதையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பாட்டிலை வீசி தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.