பசும்பொன்னில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக தேவர் குரு பூஜைக்கு சென்றுள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நடந்து வருகிறது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் காலையில் சென்றார். அவரை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் சென்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அவர் அங்கே சென்றுள்ளார். செல்லூர் ராஜு, உதயகுமார் உள்ளிட்ட மாஜி அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி உடன் இன்று முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழாவில் உடன் இருந்தனர். இங்கே எடப்பாடி மரியாதை செலுத்தும் போதே.. அவருக்கு எதிராக கடுமையான கோஷம் எழுப்பப்பட்டது. எடப்பாடி ஒழிக.. இபிஎஸ் ஒழிக என்று கோஷம் எழுப்பப்பட்டது . கட்சி தொண்டர்கள் வேனை சூழ்ந்து பலத்த பாதுகாப்பு கொடுத்தும் கூட அங்கே பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தொண்டர்கள் ஒரு பக்கம் உற்சாக வரவேற்பு அளித்தாலும் கூட எடப்பாடி ஒழிக என்று கோஷம் எழுப்பப்பட்டது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் சிரித்தபடி எடப்பாடி சென்றார்.

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், மரியாதை செலுத்திய பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அதில், சட்டமன்றத்தில் தேவர் படத்தை வைத்தது அதிமுக அரசுதான்; சென்னை நந்தனத்தில் தேவர் சிலையை அமைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. தேசமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என வாழ்ந்த மாமனிதர் முத்துராமலிங்கத் தேவர். அவரை வணங்குவது மிகப்பெரிய பாக்கியம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கார் அபிராமத்தில் மறிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரின் கார் மீது கற்களும் வீசியதாக தகவல்கள் வருகின்றன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.