காவல்துறைக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்த ஆர்.எஸ்.எஸ்.!

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்காததால் காவல்துறைக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது ஆர்.எஸ்.எஸ்.

நாட்டின் 76-வது சுதந்திர தினம் மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 22 மற்றும் 29-ம் தேதிகளில் தமிழகத்தில் 33 இடங்களில் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆர்.எஸ்.எஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு கடந்த 16-ம் தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கவில்லை என்று காவல்துறைக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு முறையீடு செய்தார்.

இந்த முறையிட்டை ஏற்க மறுத்த நீதிபதி, ஏற்கனவே அணிவகுப்பு நடத்த அனுமதி கோரிய தேதிகள் முடிவடைந்து விட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்த பிறகு இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.