திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது: அண்ணாமலை

திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே திமுகவினர் ரகளையில் ஈடுபட்டுள்ளனர் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கிரானைட் கல் குவாரி ஏலத்திற்காக டெண்டர் பெறப்பட்டது. குவாரிகளை குத்தகைக்கு எடுப்பதற்கான விண்ணப்பம் தாக்கல் செய்ய ஏராளமானோர் வந்திருந்தனர். மற்ற கட்சியினர் குவாரி குத்தகைக்கு விண்ணப்பிப்பதை தடுத்து ஆளுங்கட்சியினர் வாக்குவாதம் செய்துள்ளனர். பாஜகவைச் சேர்ந்த பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும், பாஜக தொழில் பிரிவு மாவட்ட துணைத் தலைவருமான கலைச்செல்வன் என்பவர், தன் தம்பி முருகேசன் என்பவருக்கு கல் குவாரி டெண்டருக்காக விண்ணப்பிக்க பாஜக தொழில் பிரிவு மாவட்ட தலைவர் முருகேசனுடன் அங்கு வந்துள்ளார். அப்போது, திமுகவினர் அவர்களை தடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன் தாக்கப்பட்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மரத் தடுப்புகள் உடைக்கப்பட்டன. 300க்கும் மேற்பட்டோர் தகராறில் ஈடுபட்டதில் கலெக்டர் அலுவலகமே போர்க்களமானது. இந்தச் சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குவாரி ஏலம் விவகாரத்தில் திமுகவினர் பாஜகவினரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலை தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரிகளுக்கு நடைபெற இருந்த ஏலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி கொடுக்க வந்த பெரம்பலூர் கவுல்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும் தமிழக பாஜக தொழில்துறை பிரிவு மாவட்டத் துணைத் தலைவருமான கலைச்செல்வன் மற்றும் தொழில்துறை பிரிவு மாவட்டத் தலைவரான முருகேசன் ஆகியோரை திமுக ரவுடி கும்பல் தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், திமுகவினரைத் தடுக்க முயற்சித்த, கனிம வளத்துறை துணை இயக்குனர் ஜெயபால் மற்றும் உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் குமரிஆனந்தன் ஆகிய அரசு அதிகாரிகளையும், பாதுகாப்பு பணியிலிருந்த டிஎஸ்பி பழனிச்சாமி உள்ளிட்ட காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து எச்சரிக்கை விடுத்த பிறகும், திமுக ரவுடி கும்பல் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கிருந்த செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர், அவரது அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்படும் அளவுக்கு ஏற்கனவே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே, அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமைக்கு, திமுகவினர் கொண்டு வந்துள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. மாவட்ட ஆட்சியருக்குக் கூட இந்த ரவுடி கும்பல் கட்டுப்படவில்லை என்றால், சாதாரண பொதுமக்களின் நிலைமையை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. ரவுடிகளை வைத்து ஆட்சி நடத்துவது நீண்ட காலம் நிலைக்காது. பொதுமக்கள் திருப்பி அடித்தால், திமுக ரவுடி கும்பல் முழுவதுமாகக் காணாமல் போக நேரிடும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உணர்ந்திருக்க வேண்டும். உடனடியாக, ஆட்சியர் அலுவலகத்தில் தாக்குதலில் ஈடுபட்ட திமுக ரவுடிகளைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.