மாத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு கேட்ட எடப்பாடி பழனிச்சாமி!

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக மேத்யூ சாமுவேலுக்கு எதிரான மான நஷ்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதில் இருந்து விலக்கு கேட்டு எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாக செயல்பட்ட கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் 2018ஆம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் டெல்லியில் ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டார். அத்துடன், கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரின் பேட்டியையும் வெளியிட்டு இருந்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் அப்போது இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தனது நற்பெயருக்கும், பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகக் கூறி மேத்யூ சாமுவேல் மீது 2019ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தரப்பில் 1.10 கோடி ரூபாய் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டது. 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்யும் வகையில் மாஸ்டர் நீதிமன்றத்துக்கு அனுப்பி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனுதாக்கல் செய்துள்ளார். அதில், “உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க இயலாது. நீதிமன்றத்தில் ஆஜராவதை வேண்டுமென்றே நான் தவிர்க்கவில்லை. தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எனக்கு இருக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக, உயர் நீதிமன்ற வளாகத்துக்கு நான் வரும்போது அது மற்ற வழக்குதாரர்களுக்கு இடையூறை ஏற்படுத்தும். இந்த சிக்கலை தவிர்க்க எனது வீட்டில் நான் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும். அனைத்து சட்ட வழிமுறைகளையும் பின்பற்றுவதற்கு தயாராக இருக்கிறேன். இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால் அது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கின் விசாரணையை இன்று வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இன்றைய தினம் நடைபெறும் விசாரணையில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டுமா அல்லது விலக்கு அளிப்பதா என்பது குறித்து முடிவு எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.