நாகாலாந்தில் இருப்பவன் என் உறவினர்தான். நாங்க நாகர்கள்தான்: சீமான்

நாகாலாந்து மக்கள் நாய் கறியை உணவாக உட்கொள்வது அவர்களது உரிமை; மனித மாமிசம் சாப்பிடும் அகோரிகளை சிறையில் அடைத்து விடுவீர்களா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலின் போது அருந்ததியரை ஆந்திரா வந்தேறிகள் என விமர்சனம் செய்தார் சீமான். இது தொடர்பான வழக்கு ஈரோடு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணைக்கு சீமான் ஆஜரானார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் நாய்கறி சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சீமான் கூறியதாவது:-

அருந்ததியர் குறித்து நான் பேசியது வரலாற்றைதான். வரலாற்று பக்கங்களை படித்தவன். அதனால் அப்படி பேசினேன். உணவு, உடை, வழிபாடு என்பது அவரவர் உரிமை. நான் நாயை தின்பேன்.. பேயை தின்பேன்.. அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? நாகாலாந்து மக்கள்தான் நாய் தின்கின்றனரா? சீனாவில் சாப்பிடவில்லையா? மற்ற நாடுகளில் சாப்படவில்லையா? உணவு என்பது என் உரிமை.

இந்த நாட்டில் மாட்டுக் கறி சாப்பிடாதே.. அந்த கறி சாப்பிடாதே.. பன்றி கறி சாப்பிடாதே என்கின்றனர்.. முதலில் என்னுடைய உணவு என்ன என்பதை உறுதி செய்யுங்க.. அதன் பிறகு பேசுங்க.. என் உணவு என்ன என்பதை உன்னால் உறுதி செய்ய முடியுமா? முடியாது என்கிற போது நான் எதை சாப்பிட்டால் உனக்கு என்ன?

அகோரிகள் உயிருள்ள எதனையும் சாப்பிடக் கூடாது என்பவர்கள். காய்கறிகளை கூட சாப்பிடுவது இல்லை தெரியும் தானே? இறந்த மனித உடல் வெந்து கொண்டிருக்கும் போது அதை எடுத்து ரொட்டியில் வைத்து சாப்பிடுகின்றனர். அதை என்ன செய்வது? அந்த அகோரிகளை எல்லாம் உள்ளே போடுவீங்களா? அதை கேவலம் என பேசுவீங்களா? நான் கூட நாய் போனா, நாகாலாந்து பிரியாணி போகுது விடுடா என்பேன்.

நாகாலாந்தில் இருப்பவன் என் உறவினர்தான். நாங்க நாகர்கள்தானே.. நாகாலாந்துன்னு பெயர் எப்படி வந்தது? மண்ணின் பூர்வகுடிகள்.. அவன் விருப்பம்.. அவ என்னத்தையோ சாப்பிடுவான். காவிரியில் தண்ணீர் வராத போது நாங்க எலிக்கறி தின்னோம்.. அப்ப எங்க போன? பாம்புக்கறி தின்னுகிட்டு இருந்தப்ப எங்க போன? நான் நத்தை தின்பேன்.. நண்டு தின்பேன்.. உனக்கு விருப்பம்னா சாப்பிடு.. இல்லைன்னா அங்கிட்டு போடா.. வேலையை பாருடா.. சும்மா அதை திங்காதே.. இதை திங்காதேன்னு.. இவ்வாறு சீமான் கூறினார்.