அதிமுக போல திமுகவையும் மிரட்டலாம் என பகல் கனவு காண்கிறர்கள்: மு.க ஸ்டாலின்

ரெய்டு மூலமாக அதிமுகவை மிரட்டி நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கியது போல நம்மையும் மிரட்டலாம் என பகல் கனவு காண்கிறார்கள். இந்த சலசலப்புகளுக்கும் மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் பயப்படும் இயக்கம் அல்ல என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் உரையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார். முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் பயன் அடையும் வகையில் பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதனால், மக்கள் நம் ஆட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம், விடியல் பயணம் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து வசதி, காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம் என திராவிட மாடல் அரசின் எல்லா திட்டங்களையும் நாம் விளக்கமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவை எல்லாம் உங்களுக்கே நன்றாக தெரியும். இதே மாதிரியான சாதனைகள் ஒன்றிய அளவிலும் நிகழ்த்தப்பட வேண்டும் என்றுதான் இந்தியா கூட்டணியை நாம் உருவாக்கியிருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக நாம் செய்ய வேண்டிய கடமை என்னவென்றால் நாம் செய்த செய்கிற சாதனைகளை மட்டும் சொல்லாமல் பாஜகவின் உண்மை முகத்தையும் வெளிபப்டுத்த வேண்டும். தமிழ்நாட்டிற்காக எந்த திட்டத்தையும் கொண்டு வரமால் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது.

பாஜகவின் துரோகத்தையும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். பாஜகவின் கைப்பாவையாக அத்தனை துரோகத்திற்கும் சுயநலத்துடன் துணை நின்றது அடிமை அதிமுக. இன்றைக்கு பிரிந்தது போல நாடகம் ஆடும் இந்த கும்பலின் துரோகங்களை மக்களிடம் பட்டியல் போட்டு அம்பலப்படுத்த வேண்டும். திமுகவும் இந்தியா கூட்டணியும் பாஜகவின் மக்கள் விரோத தன்மையை அம்பலப்படுத்துகிறது என்றுதான் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையில் பாஜக இறங்கியிருக்கிறது. அதனால்தான் வருமான வரித்துறை ரெய்டுகள் எல்லாம் நடைபெறுகிறது. ரெய்டு மூலமாக அதிமுகவை மிரட்டி நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கியது போல நம்மையும் மிரட்டலாம் என பகல் கனவு காண்கிறார்கள். இந்த சலசலப்புகளுக்கும் மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் பயப்படும் இயக்கம் அல்ல திமுக. 75 ஆண்டு காலமாக இதையெல்லாம் எதிர்த்து நின்றுதான் வெற்றி பெற்று இருக்கிறோம். அந்த வெற்றி என்றைக்கும் தொடரும்.

பாஜகவின் கூட்டணிக் கட்சிகளாகவே வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் செயல்படுகிறது. அமலாக்கத்துறைக்கும் வருமான வரித்துறைக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும்தான் கண்ணுக்கு தெரிகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் அவரவர் அலுவலகத்தை விட்டு வெளியே கூட வருவது இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் நம் இயக்கத்தினர் ஒவ்வொருவராக சோதனை செய்கிறார்கள். இப்போது எ.வ வேலுவிடம் சோதனை செய்கிறர்கள் . வருமானவரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுகளில், வழக்குகளில் கன்விக்‌ஷன் ரேட் எவ்வளவு என்று பார்த்தால், அவர்கள் விசாரிக்கும் வழக்குகளில் 1 விழுக்காடு கூட இல்லை. வெறும் அரசியல் பழிவாங்கலுக்கான பாஜகவின் கூட்டணி கட்சிகள் வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும். அதனால்தான் வருகின்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மிக மிக முக்கியம் என்று சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.