இலங்கை சிறையில் இருந்து 38 தமிழக மீனவர்கள் விடுதலை!

இலங்கை சிறையில் இருந்த மேலும் 38 தமிழக மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழகத்திலிருந்து கடந்த அக்டோபர் 14 மற்றும் 28-ஆம் தேதிகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 67 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களை விடுதலை செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில், மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட 38 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். மொத்தம் 67 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று புதன்கிழமை விடுதலையான 4 பேர் உள்பட இதுவரை 42 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலையான மீனவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் ஓரிரு நாள்களில் தமிழகம் வரவுள்ளனர்.