கடல் வத்தி கருவாடு திங்க நினைச்ச கொக்கு குடல் வத்தி செத்து போச்சாம்: ஜெயக்குமார்

பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறையே இருக்காது என அண்ணாமலை பேசியதை விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “கடல் வற்றி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு, குடல் வற்றி செத்ததாம்” என கிண்டலாக கூறியுள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். பாஜக ஆட்சிக்கு வரும் நாள் இந்து சமய அறநிலையத்துறையின் கடைசி நாள். இது பாஜகவின் சூளுரை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் முதல் நாள், முதல் நொடியில் கடவுளை நம்புபவன் முட்டாள் என்றவரின் சிலை, கொடிக்கம்பம் இங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தார் அண்ணாமலை.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், அண்ணாமலையின் பேச்சு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், “தலைவர்களின் புகழை போற்றுவது தான் மாண்பும், மரியாதையும். தலைவர்களின் புகழை சிதைக்கும் வகையில் எந்தவித கருத்து கூறினாலும், அது முகம் சுழிக்கும் வகையில் தான் இருக்கும். தலைவர்களை சீண்டினால் அது அண்ணாமலைக்குத் தான் பின்னடைவு” என்றார்.

பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என்கிறாரே அண்ணாமலை என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “கடல் வற்றி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு, குடல் வற்றி செத்ததாம். முதலில் அவர் சொன்னது நடக்கட்டும் பார்க்கலாம்” என கூறினார்.