ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: கருக்கா வினோத் மீது என்ஐஏ வழக்குப் பதிவு!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் மீது 3 பிரிவுகளின் கீழ் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த அக்டோபர் 25-ம் தேதி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது ஒரு நபர் பெட்ரோல் குண்டுகளை வீச முயன்றார். ஆளுநர் மாளிகையின் வெளியே பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார், அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். அதற்குள் அவர் வீசிய பெட்ரோல் குண்டுகள் மாளிகைக்கு வெளியே விழுந்தன. மேலும், அவரிடம் இருந்த 2 பெட்ரோல் குண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பதும், இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார், கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், குண்டர் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில், கருக்கா வினோத் மீது 3 பிரிவுகளின் கீழ் தேசிய புலனாய்வு முகமை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வெடி பொருட்கள் தடுப்பு சட்டம், கூட்டுச் சதி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் என்ஐஏ வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், கருக்க வினோத் தொடர்புடைய வழக்கு ஆவணங்களை தமிழக காவல் துறையிடம் இருந்து என்ஐஏ எப்போது பெறும், கருக்கா வினோத்திடம் விசாரணை எப்போது தொடங்கும் என்பது உள்ளிட்ட விவரங்கள் அதிகாரபூர்வமாக தெரியாத நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.