பிரதமர் மோடி எங்கு சென்றாலும் என்னை துஷ்பிரயோகம் செய்கிறார்: ராகுல் காந்தி!

பிரதமர் மோடி எங்கு சென்றாலும் என்னை துஷ்பிரயோகம் செய்கிறார் என்று ராகுல் காந்தி கூறினார்.

சத்தீஷ்கார் மாநிலம் பலோடா பஜார் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

பிரதமர் மோடி எங்கு சென்றாலும் என்னை துஷ்பிரயோகம் செய்கிறார். ஆனால் நான் அதைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை. மோடியின் உத்தரவாதம் என்றால் அது அதானியின் உத்தரவாதம்தான். நான் எனது குறிக்கோளை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். மோடி, அதானிக்கு எவ்வளவு பணம் கொடுக்கிறாரோ அதே அளவு பணத்தை நான் ஏழை மக்களுக்குக் கொடுப்பேன். நீங்கள் ஒரு ரூபாய் அதானிக்குக் கொடுத்தால் அந்த ஒரு ரூபாயை நான் ஏழைகளுக்கு கொடுப்பேன்.

காங்கிரஸ் அரசு, அது ஆளும் மாநிலங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்கின்றது, அதே நேரத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு அதானி போன்ற பெரிய தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்கிறது. சத்தீஷ்காரில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒரு வரலாற்று முடிவை எடுத்துள்ளது. எல்கேஜி முதல் பிஜி வரை இலவச கல்வி வழங்க முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

சத்தீஷ்கார் மாநிலத்தில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 7 ஆம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடைபெற்ற நிலையில் மீதியுள்ள 70 தொகுதிகளுக்கு வருகிற 17ஆம் தேதி(நாளை) தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஷ்காரில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.