ஊழல்வாதியான கேசிஆர் வீட்டில் சோதனை நடத்தாதது ஏன்?: விஜயசாந்தி

“பாஜகவைப் பொறுத்தவரை தெலங்கானா முதல்வர் கேசிஆர் மிகப் பெரிய ஊழல்வாதி, என்றாலும் அவர் மீது பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள்” என்று விஜயசாந்தி விமர்சித்துள்ளார்.

மேலும், தான் காங்கிரஸில் இணைந்தது குறித்து விளக்கமும் அளித்துள்ளார். இது குறித்து விஜயசாந்தி கூறுகையில், “பாஜகவும், பிஆர்எஸ் கட்சியும் ஒன்றாக இருப்பதால் நான் காங்கிரஸில் இணைந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் தெலங்கானாவுக்கு வரும் பாஜக முக்கிய தலைவர்கள் ‘கேசிஆர் ஓர் ஊழல்வாதி, அவரது மகள் மதுபான ஊழலில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார், பிஆர்எஸ் ஒரு குடும்பக் கட்சி’ என்று கூறுவார்கள். ஆனால், டெல்லிக்குத் திரும்பிச் சென்றதும் பிறத் தலைவர்களின் வீடுகளில் மட்டும் சோதனை நடத்துவார்கள். ஆனால் சிபிஐயோ, அமலாக்கத் துறையோ கேசிஆர் வீட்டுக்கு வராது.

கேசிஆர் சிறையில் அடைக்கப்பட வேண்டும். கேசிஆருக்கு எதிராக இருந்தார் என்பதற்காக பாஜக பண்டி சஞ்சய் குமாரை கட்சியில் இருந்து நீக்கியது. தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பாக இந்த முடிவினை எடுத்தது அநீதியானது. சஞ்சயின் நீக்கத்தால் பாஜக தனது சொந்தக் கட்சியையே துண்டாடியது. தெலங்கானாவில் பாஜக ஏற்படுத்திய பேரழிவுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று விஜயசாந்தி கூறினார்.