போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் பிணை கைதிகளை விடுவித்தது ஹமாஸ்!

பாலஸ்தீனம் விடுதலை தொடர்பாக கடந்த மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹாமஸ் படையினர் ஏராளமான பொதுமக்களை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்நிலையில் தற்போது 13 இஸ்ரேலிய பிணை கைதிகள் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த 12 பேரை விடுவித்துள்ளனர்.

கடந்த 1940களில் பாலஸ்தீனம் முழுவதும் இஸ்லாமியர்கள்தான் இருந்தனர். அப்போது ஜெர்மனியிடமிருந்து அடைக்கலம் தேடி வந்த யூதர்கள் இங்கு அகதிகளாக குடியேறினர். ஆனால் அவர்களுக்கு ஒரு நாடு தேவைப்பட்டது. எனவே பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி தங்களுக்கான எல்லையை வகுத்துக்கொண்டனர். இதற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் சப்போர்ட். ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களையும் மேற்கு கரை, காசா என இரண்டாக பிரித்துவிட்டு மீதமுள்ள நிலத்தை இஸ்ரேல் என யூதர்கள் பெயரிட்டுக்கொண்டனர். சொந்த மண்ணிலேயே தங்களை அகதிகளாக்கிவிட்டார்கள் என்கிற கோபம்தான் ஹமாஸ் எனும் அமைப்பை உருவாக்கியது. இதுதான் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் சுருக்கமான கதை.

ஆக இப்படியாக சொந்த நிலத்திற்காக ஹமாஸும், அவர்களுக்கு எதிராக இஸ்ரேலும் அடிக்கடி மோதல்களில் ஈடுபடுவதுண்டு. இந்த மோதல் கடந்த 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி 49வது நாளாக தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்திருக்கிறது. உயிரிழந்தவர்களில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள்.

ஏற்கெனவே போர் நிறுத்தம் குறித்து ஐநா பொது சபையில் ஜோர்டன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. இதை இஸ்ரேல் கடைபிடிக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் அதை மதிக்காமல் இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படி இருக்கையில் இஸ்ரேலிலிருந்து பிடித்து செல்லப்பட்ட பிணை கைதிகளை ஹமாஸ் விடுவிக்க ஒப்புக்கொண்டிருக்கிறது. அதன்படி இன்று தாய்லாந்து நாட்டை சேர்ந்த 12 பேர் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த 13 பேர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இதனை தாய் பிரதமர் உறுதி செய்திருக்கிறார்.

பிணை கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேல், கத்தார் மூலமாக ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை போட்டிருக்கிறது. ஆனால் அதன் அடிப்படையில் இஸ்ரேல் பிணை கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தாய்லாந்தை சேர்ந்த பிணை கைதிகள் எகிப்து எடுத்த முன் முயற்சிகள் காரணமாக விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இஸ்ரேல் பிணை கைதிகள் எகிப்தின் ராஃபா எல்லை வரை செஞ்சிலுவை சங்கத்தினர் கொண்டு சேர்ப்பார்கள் என்றும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் இஸ்ரேலுக்கு செல்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிணை கைதிகள் கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கப்பட்டு வுரும் நிலையில், விரைவில் மத்திய கிழக்கில் அமைதி திரும்பும் என்று நம்பப்படுகிறது.