இரண்டாவது கட்டமாக ஹமாஸால் தாமதமாக விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள்!

ஹமாஸ் இரண்டாவது கட்டமாக பிணைக் கைதிகளை விடுவித்துள்ளது. இஸ்ரேல் காசாவுக்குள் உதவி பொருட்களுடனான ட்ரக்குகளை அனுப்புவது தொடர்பாக எழுந்த சர்சையால் கடைசி நேரத்தில் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் தற்காலிகமாக 4 நாட்கள் நிறுத்தப்பட்டுள்ளது. கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முயற்சிகளால் இந்த தற்காலிக போர் நிறுத்தம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் முதல் இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காசா பகுதியில் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு குண்டுச்சத்தம் மற்றும் துப்பாக்கிச் சூடுகளின் சத்தம் ஓய்ந்துள்ளது.

ஹமாஸ் விடுவிக்கும் பணயக் கைதிகள் ஒவ்வொருவருக்கும் 3 பாலஸ்தீனியர்கள் விடுக்கப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி நான்கு நாட்களில் ஹமாஸ் விடுவிக்கும் 50 பணயக் கைதிகளுக்கு பதிலாக இஸ்ரேல் 150 பாலஸ்தீனியர்களை விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக முதல்கட்டமாக 9 பெண்கள், 4 சிறுவர்கள் என 13 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அவர்களுக்கு பதிலாக ஒப்பந்தப்படி குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 39 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவித்தது. விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 4 தாய்லாந்து நாட்டவர்கள் மற்றும் 13 இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவித்தது.

இதனிடையே உதவி பொருட்களுடன் சென்ற ட்ரக்குகளை வடக்கு காசாவில் அனுமதிப்பது உட்பட அனைத்து போர் நிறுத்த ஒப்பந்தங்களையும் இஸ்ரேல் மேற்கொள்ளும் வரை பிணையக் கைதிகளை விடுவிப்பது தாமதப்படுத்தப்படும் என ஹமாஸ் ஆயுதக் குழுவினர் அறிவித்தனர். இதுகுறித்து பேசிய ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஒசாமா ஹம்டன், வெள்ளிக்கிழமை முதல் காசாவிற்குள் நுழைந்த 340 உதவி டிரக்குகளில் 65 மட்டுமே வடக்கு காசாவை அடைந்துள்ளன என்றார். இது இஸ்ரேல் ஒப்புக்கொண்டதில் பாதிக்கும் குறைவானது என்றும் கூறினார்.

இதனால் இந்த தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் சிக்கலாகும் நிலை ஏற்பட்டது. சனிக்கிழமையன்று வடக்கு காசாவில் 61 டிரக்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரம் தாமதமாக இரண்டாவது குழு பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய அதிரடி தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் போர் அறிவித்தது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற போரில் இதுவரை 12000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.