தேர்தல் நாளில் வாக்கு சேகரித்ததாக பிஆர்எஸ் கவிதா மீது காங்கிரஸ் புகார்!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று (நவ.30) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில் வாக்களிக்க வந்த இடத்தில் தனது கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததார் என்று பிஆர்எஸ் கட்சி எம்எல்சி கவிதா மீது காங்கிரஸ் கட்சி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்துள்ளது.

தெலங்கானாவில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுகள் தொடங்கின. இதனை ஒட்டி இன்று காலை முதலே பிரமுகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். சபரிமலைக்கு மாலை அணிந்துள்ள நிலையில், நடிகர் சிரஞ்சீவி ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தனது குடும்பத்தாருடன் வரிசையில் நின்று வாக்களித்தார். இதேபோன்று இங்கு ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, எம்.எல்.சி கவிதா உள்ளிட்டோர் வாக்களித்தனர். இது விடுமுறை அல்ல. ஜனநாயக கடமை என்பதால் அனைவரும் வாக்களிக்க முன் வரவேண்டுமென பிரமுகர்கள் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

பிஆர் எஸ் கட்சி எம்எல்சி கவிதா, பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள டிஏவி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்கள் பிஆர்எஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரினார். இதனை சுட்டிக் காட்டியுள்ள தெலங்கானா காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர், தேர்தல் ஆணைய ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜி.நிரஞ்சன், ”வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்கு சேகரித்து கவிதா தேர்ந்த நடத்தை விதிமுறையை மீறியுள்ளார். இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம்” என்றார்.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில்,தெலங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர், மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் டிச.3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ், ஆளும் பிஆர்எஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. பிஆர்எஸ் ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

ஜங்கோன் தொகுதியில் பூத் எண் 244ல், பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே கைகளப்பு ஏற்பட்டது. எனினும், போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதேபோல், நிஜாமாபாத் மாவட்டத்தின் போதன் நகரில் பிஆர்எஸ் – காங்கிரஸ் தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர். இப்ராஹிம்பட்டிணம் தொகுதிக்கு உட்பட்ட கானாபூர் கிராமத்தில் பிஆர்எஸ் – காங்கிரஸ் இடையே தகராறு ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மற்றபடி, பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி 22% வாக்குகள் பதிவான நிலையில், பகல் 1 மணி நிலவரப்படி 37% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முதல்வர் கே. சந்திரசேகர ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி. ராமா ராவ், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பாஜக எம்பிக்கள் பண்டி சஞ்சய், அரவிந்த் உள்பட 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், ஆளும் பாரத் ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்), காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில், பிஆர்எஸ் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 118 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒரு தொகுதியை கூட்டணி கட்சியான சிபிஐக்கு வழங்கி உள்ளது. பாஜக, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில், பாஜக 111 தொகுதிகளிலும், ஜன சேனா 8 தொகுதிளிலும் போட்டியிடுகின்றன.