விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது மனைவி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தற்போது விராலிமலை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார். விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பல்வேறு ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, 2016-2021 காலகட்டத்தில் தன் பெயரிலும், தன்னுடைய மனைவி உள்ளிட்ட குடும்பத்தார் பெயரிலும், தான் பங்குதாரராக இருக்கும் நிறுவனங்களின் பெயர்களிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடி வரையிலும் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன்பேரில் 2021 அக்டோபர் மாதம் தமிழகம் முழுவதும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவருக்குத் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில், விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் ரூ.23,85,700 ரொக்கப் பணம், தங்க நகைகள், ஆவணங்கள் மற்றும் ஹார்டு டிஸ்க்குகளும் கைப்பற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்திருந்தனர்.

விஜயபாஸ்கர் மற்றும் அவர் பங்குதாரராக இருக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனைக்குப் பிறகு, விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35,79,90,000 வரையிலும் சொத்து சேர்த்ததாக 2021 அக்டோபர் 17ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். இதில், விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். தலா 16 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருவரிடமும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இருவரும் குற்ற பத்திரிக்கை நகல்களில் ஒரு சில பகுதிகள் இல்லாமல் இருப்பதால் மீண்டும் தங்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்கள் வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயபாஸ்கர், அவரது மனைவிக்கு பதிலாக அவர் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா கேட்ட 16 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்களை இருவரிடமும் மீண்டும் ஒப்படைப்பதற்கு சம்மதம் தெரிவித்து அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மீண்டும் வழங்கிய தலா 16 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை நகல்கள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி தரப்பு வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.