மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை செய்திட தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு!

அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தேவையான உதவிகளையும் செய்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை அல்லது நாளை மறுதினம் தீவிர புயலாக மாறி, வரும் 5-ம் தேதி வட தமிழக எல்லையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் டிசம்பர் 3-ம் தேதி முதல் வட தமிழக மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், நிவாரண உதவிகள் வழங்கும் நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகங்கள், நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விட்டிருப்பதால் அரசு நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அரசு அதிகாரிகளின் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கழக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகள் தமது பகுதிகளில் இருந்து மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை செய்திட உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். மக்களுக்கான உணவு, உடை, மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு உதவிடும் வகையில் அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தேவையான உதவிகளையும் செய்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.