பெங்களூருவில் 68 பள்ளிகளை அலறவிட்ட வெடிகுண்டு மிரட்டல்!

பெங்களூரில் நேற்று ஒரே நாளில் 68 பள்ளிகளுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு இ-மெயிலில் இருந்த தகவல் வெளியாகி அனைவரையும் திடுக்கி வைத்தது. இந்நிலையில் தான் அந்த இ-மெயில் எங்கிருந்தது வந்தது என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூர் பசவேஸ்வரா நகர், கெங்கேரி, எலகங்கா, எமலூர், ஒயிட்பீல்டு உள்பட பல்வேறு இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நேற்று காலையில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதாவது நேற்று காலையில் அந்தந்த பள்ளிகளின் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரிகளுக்கு சென்றது. அதில் “பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் வெடிபொருட்கள் உள்ளன. நீங்கள் அல்லாவின் எதிரிகளாக இருந்தால் உங்களையும், உங்களின் குழந்தைகளையும் கொன்று விடுவோம். உருவ வழிபாட்டை புறக்கணிக்க வேண்டும். அதோடு அல்லாவின் உண்மையான மார்க்கத்தை இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும்.நீங்கள் இஸ்லாமுக்கு மாற வேண்டும். இல்லாவிட்டால் இஸ்லாமின் வாளுக்கு பதில் சொல்லி இறக்க நேரிடும். அல்லாஹூ அக்பர்’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை பார்த்த பள்ளி நிர்வாகத்தின் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து அந்த பள்ளிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். முதலில் 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்பட்ட நிலையில் அதன் பிறகு இதன் எண்ணிக்கை என்பது 44, 48 என உயர்ந்ததோடு 68 என்ற அளவில் உயர்ந்தது. அதாவது பெங்களூரில் உள்ள 68 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் சென்றது தெரியவந்தது. இந்த பள்ளிகளில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டு உள்பட வெடிக்கும் தன்மை கொண்ட பொருட்கள் எதுவும் இல்லாதது தெரியவந்தது. அதோடு இ-மெயிலில் வந்தது வெடிகுண்டு புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து பெங்களூர் மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் முதற்கட்ட விசாரணையில் Kharijites @beeble.com என்ற பெயரிலான இ-மெயில் முகவரியில் இருந்து வந்துள்ளது. மேலும் போலீசாரின் தொடர் விசாரணையில் மிரட்டல் இ-மெயில் எங்கிருந்து வந்தது? அதன் பின்னணியில் உள்ள நபர் யார்? என்பது பற்றிய முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த மிரட்டல் மெயில் என்பது செக்குடியரசு அல்லது ஸ்வோவாக்கியா நாடுகளில் இருந்து வந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.