கான் யூனிஸ் நகரை விட்டு மக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவு!

காசாவின் இரண்டாவது பெரிய நகரான கான் யூனிசை விட்டு மக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி 7 வாரங்களுக்கு பிறகு, அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகளின் முயற்சியால் கடந்த வாரத்தில் 7 நாட்கள் இரு தரப்பிலும் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் பல இஸ்ரேல் பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீன சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்த்திருந்த நிலையில், 7 நாட்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காசாவில் மீண்டும் குண்டுமழை பொழிந்து வருகிறது.

இந்நிலையில், காசாவின் இரண்டாவது பெரிய நகரான கான் யூனிசை விட்டு மக்கள் வெளியேறும்படி, இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது. இதனிடையே, கான் யூனிஸ் மற்றும் தெற்கு நகரமான ரபா மற்றும் வடக்கு காசாவின் சில பகுதிகளில் இஸ்ரேல் படை நேற்றிரவு தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், கான் யூனிஸ் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 5 பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பு கருதி கடலோரப்பகுதி அல்லது தென்மேற்கில் உள்ள வேறு இடங்களுக்கு செல்லும்படி துண்டுபிரசுரத்தின் மூலம் பொதுமக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. ஹமாஸ் படைத் தலைவர்களில் பலர் கான் யூனிஸ், ரபா பகுதிகளில் பதுங்கி இருப்பதால், அங்கு அவர்களை தேடி அழிக்கும் பணியில் ஈடுபடவே பொதுமக்கள் வேறு இடங்களுக்கு செல்லும்படி இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.