இந்தியா வந்துள்ள கென்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

இந்தியா வந்துள்ள கென்ய அதிபர் வில்லியம் ரூடோ உடனான உரையாடல் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் அதிபா் வில்லியம் ரூடோ 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு நேற்று திங்கள்கிழமை (டிச.4) வந்தார். கென்ய அதிபராக ரூடோ பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு முதன்முறையாக வந்துள்ளார். அவர் இன்று (டிச.5) இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “கென்ய அதிபர் வில்லியம் ரூடோ உடன் இன்று நடைபெற்ற உரையாடல் ஆக்கப்பூர்வமானதாக அமைந்தது. இந்தியா மற்றும் கென்யா இடையிலான இத்தனை ஆண்டுகள் உறவு குறித்து மதிப்பாய்வு செய்வதற்கான சிறந்த வாய்ப்பாக இருந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசித்தோம். தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் கண்டுபிடிப்புகள், எரிசக்தி மற்றும் பல துறைகளிலும் இந்தியா மற்றும் கென்யா இணைந்து செயல்படும். இரு நாட்டு நல்லுறவில் மக்களுக்கு இடையேயான தொடர்புகள் மிகவும் முக்கியமானது. எனவே கலாச்சார தொடர்புகளை மேம்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசித்தோம்” என்று தெரிவித்துள்ளார்.