மீண்டும் மிரட்டும் கொரோனா: நிரம்பும் சிங்கப்பூர் மருத்துவமனைகள்!

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கோவிட் 19 வைரஸால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். கொரோனா பரவலால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு கொரோனா அச்சுறுத்தலின் தாக்கம் இருந்தன. உயிரிழந்தவர்கள் குவியல் குவியலாக புதைக்கப்பட்டனர். தகன மேடைகளும் ஆங்காங்கே எரிந்தப்படி இருந்தன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரும்பாலான நாடுகள் கடும் பொருளாதார சரிவை சந்தித்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா தாக்கத்தில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகதான் உலக நாடுகள் மீண்டு வருகின்றன.

இந்நிலையில் மீண்டும் மிரட்ட தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் 32,035 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் கொரோனா தொற்றால் பதிவான எண்ணிக்கையில் இதுவே அதிகமாகும். இதற்கு முந்தைய வாரத்தில் அதிகபட்சமாக மார்ச் மாதத்தில் ஒரு வாரத்தில் 28,410 நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டன.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக சிங்கப்பூர் அரசின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கோவிட் 19 தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரம் 136 ஆக இருந்த நிலையில் இந்த வாரம் 225 ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு அதிகரித்தற்கு மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது மற்றும் மக்களின் பயணத்தின் போது அதிகரித்த தொடர்புகள் காரணமாக இருக்கலாம் என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் நாடு சுற்றுலாவுக்கு சிறந்த இடமாக உள்ளது. அதோடு இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும் அங்கு வேலை மற்றும் தொழில் ரீதியாக அதிகம் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது உலக நாடுகளையும் கவலையடைய செய்துள்ளது.