ஒடிசா மாநிலத்தில் மிகப்பெரிய ரெய்டு; ரூ.300 கோடி பறிமுதல்!

நாட்டிலேயே மிகப்பெரிய ஐடி ரெய்டு என்று சொல்லும் அளவிற்கு ஒடிசா மாநிலத்தில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டு 5வது நாளாக எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தகவல் ஒட்டுமொத்த நாட்டையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதுவரை சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு பணம் சிக்கியுள்ள நிலையில் இன்னும் எத்தனை கோடி மிச்சமிருக்குமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வருமான வரித்துறை சோதனையில் கோடிக்கணக்கில் பணம் சிக்கிய சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளன. இவை எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக ஒடிசா மதுபான நிறுவனங்களில் பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. பவுத் மதுபான நிறுவனம் (Boudh Distillery Pvt Ltd) உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 6ஆம் தேதி ஐடி ரெய்டு தொடங்கியது. கதவை திறந்ததும் ஏகப்பட்ட பீரோக்கள். ஒவ்வொரு பீரோவிலும் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள். இதில் 500 ரூபாய் நோட்டுகள் தான் அதிகம் என்கின்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி ஆச்சரியமும், அதிர்ச்சியும் அளித்திருக்கிறது. இந்த பணத்தை எண்ண 40 மிகப்பெரிய மற்றும் சிறிய பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. வருமான வரித்துறை அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலகர்கள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

4 நாட்களைக் கடந்து இன்று 5வது நாள் ஆகிவிட்டது. இன்னும் பணத்தை எண்ணி முடிக்க முடியவில்லை. இதுவரை சுமார் 300 கோடி ரூபாய் பணம் எண்ணப்பட்டுள்ளது. இன்னும் 8 லாக்கர்களும், 10 அறைகளும் திறக்கப்படவில்லை என்று கூறுகின்றனர். எனவே மொத்த பணம் 1,000 கோடி ரூபாயை தாண்டி விடும் என்கின்றனர். ஒரே ரெய்டில் எந்த ஒரு ஏஜென்சியாலும் இவ்வளவு பெரிய தொகை கைப்பற்றப்பட்டது கிடையாது என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

எண்ணப்பட்ட பணத்தை வங்கிகளுக்கு கொண்டு செல்ல ஏராளமான வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இது தனியார் நிறுவனத்தின் வளாகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. எப்படியும் பின்னணியில் அரசியல் புள்ளிகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. எனவே யார் அவர்கள் என விசாரித்தால் பாஜக தரப்பு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி திராஜ் பிரசாத் சாகு என்பவருக்கு சொந்தமான வளாகங்களிலும் சோதனை செய்யப்பட்டு பணம் சிக்கியுள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புபடுத்தி வருகின்றனர். அப்படியே இந்தியா கூட்டணி மீதும் குற்றச்சாட்டுகள் குவியத் தொடங்கியுள்ளன. 2024 மக்களவை தேர்தலுக்காக பாஜகவிற்கு எதிராக இந்தியா கூட்டணி தங்களை வலுப்படுத்தி கொள்ள தீவிரம் காட்டி வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் பின்னடைவாக மாறக்கூடும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

பிரதமர் மோடியே தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் இதுபற்றி பதிவிட்டிருக்கிறார். அதில், நன்றாக பாருங்கள் மக்களே. நேர்மை, உண்மை எனப் பேசி வரும் எதிர்க்கட்சி தலைவர்களின் முகங்களை பாருங்கள். கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள். பொதுமக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாய் நோட்டும் திரும்பி பெறப்படும். இது மோடியின் வாக்குறுதி எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே கூறியிருக்கும் விஷயம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணம் சட்டீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகலுக்கு தொடர்புடையதாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இவர் மட்டுமின்றி இன்னும் பலருக்கு தொடர்பிருப்பதாக பாஜக தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.