உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி: எல்.முருகன்

வருகிற 2047-ம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சி அடைந்த நிலைக்கு பிரதமர் மோடி எடுத்து செல்வார் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தலைமை தபால் நிலையம் சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கணக்கு புத்தகங்கள் வழங்கும் விழா, சிவன் புரம் அய்யப்பன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமை தாங்கி பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி பெண் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதிலும் செல்வமகள் சேமிப்பு திட்டம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உலகின் சக்தி வாய்ந்த தலைவராக, பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார். வருகிற 2047-ம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சி அடைந்த நிலைக்கு அவர் எடுத்து செல்வார். அப்போது அனைவருக்கும், அனைத்தும் கிடைத்து இருக்கும். அதற்கான உத்தரவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடுத்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து நமது லட்சியம்-வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற யாத்திரையையொட்டி பொதுமக்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடிய நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்றார். பின்னர் அந்த யாத்திரையை தொடங்கி வைத்தார்.