தனது குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வாங்கும் கொடுமையை எந்த தந்தையும் வாழ்வில் சந்திக்கக்கூடாத கொடுமை. இது தமிழக சுகாதாரத்துறையின் கறுப்பு நாள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
வட சென்னையின் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மசூத். இவரது மனைவி சவுமியாவுக்கு சில தினங்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. சாலை முழுவதும் மழை வெள்ளம் நிரம்பி இருந்ததால், சவுமியாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் அவருக்கு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. எனினும், தொப்புள் கொடி அறுபடாததால் தனது மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் மீன் வண்டியில் வைத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு சென்றிருக்கிறார். அங்கு ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள், பிணவறைக்கு அதன் உடலை அனுப்பினர். இதன் தொடர்ச்சியாக, குழந்தையின் உடலை முறையாக துணியை வைத்து மூடாமல் ஒரு அட்டைப் பெட்டியில் ஏதோ பொருளை வைத்து கொடுப்பதை போல, குழந்தையின் சடலத்தை மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்திருக்கிறார்கள். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஊழியர்களை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து முன்னாள் தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான சி. விஜயபாஸ்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
சென்னையில் இறந்த பச்சிளம் குழந்தையின் உடல் அட்டைப்பெட்டியில்.. தமிழக சுகாதாரத் துறையின் கருப்பு நாள். வடசென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மசூத் என்பவரின் மனைவி செளமியாவிற்கு கடந்த 5-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், வெள்ளத்தின் நடுவே தட்டுத்தடுமாறி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பெண் குழந்தை பிறந்து இறந்த கொடுமைக்கு நடுவே, குழந்தையின் உடலை அடக்கம் செய்ய 2500 ரூபாய் கேட்டிருக்கிறார்கள். நான்கு நாட்களுக்குப் பிறகு இறந்த குழந்தையின் உடலை சரியான முறையில் மூடப்படாமல் மருத்துவ அட்டைப்பெட்டியில் வைத்து தந்தையிடம் கொடுத்திருக்கிறார்கள்.
“கண்முன்னே இறந்து கிடக்கும் குழந்தையை முறையாக மூடி கொடுங்கள் என பெற்றோர்களா சொல்ல முடியும்? அது, அரசு மருத்துவமனையின் கடமை அல்லவா?” எந்த தந்தையும் தன் வாழ்வில் சந்திக்கவே கூடாத கொடுமை இது. அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை இந்த அரசு காப்பாற்ற தவறி விட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக ‘தமிழக சுகாதாரத்துறை ஐ.சி.யூ-வில் இருக்கிறது’ என தொடர்ந்து ஆதாரங்களோடு குற்றஞ்சாட்டி வருகிறோம். இதோ மற்றுமோர் உதாரணம். இவ்வாறு விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
