சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிடப்பட்டது. இந்த விவகாரத்தில் டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மற்றும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி இபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தோடு, வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து உத்தரவிட்டது. ஒரு மாதத்திற்குள் சாட்சிகளை பதிவு செய்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, அதனை அறிக்கையாக ஜனவரி 12ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கூறக்கூடிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என தெரிவித்த நீதிபதிகள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என ஏற்கெனவே கூறியதை மீண்டும் நினைவுப்படுத்துவதாக கூறினர். மேலும், சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பான பாதுகாப்புகளை வழங்கி வருவதால், எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தல் வழங்க அவர் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.