வெள்ள மீட்பு பணிகளில் திமுக அரசு மொத்தமா தோத்துடுச்சு: பியூஷ் கோயல்

தென் மாவட்டங்களில் வெள்ள மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக திமுகவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தென் மாவட்டங்களாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று முன் தினம் காலை முதல் நாள் முழுவதும் அதிதீவிர கனமழை கொட்டியது. நேற்றும் தீவிர கனமழை தொடர்ந்ததால் நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் காரணமாக கரையோர கிராமங்கள் நீரில் மூழ்கின. நெல்லை, தூத்துக்குடி நகரங்கள் முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்தன.

இன்று காலை மழை நின்றுவிட்ட நிலையில் தமிழக அரசு வெள்ள மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. படகுகள் மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு ஹெலிகாப்டர் மூலமாக உணவு விநியோகம் செய்யப்பட்டது. மக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளம் வடித்து வருகிறது. உதயநிதி, தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் நெல்லை, தூத்துகுடியில் முகாமிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

இதனிடையே மாநிலங்களவையில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்றும் வரும் நிலையில், மக்களவை அத்துமீறல் குறித்து கேள்வி எழுப்பியதன் பேரில் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுதொடர்பான அமளிக்கு நடுவே அவையைத் தொடர்ந்து மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வழிநடத்தினார்.

அவையில் பேசிய அதிமுக எம்.பி தம்பிதுரை, “தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறியுள்ளார்” என்று சுட்டிக்காட்டினார். சென்னை வெள்ளத்தைத் தொடர்ந்து நான்கு தெற்கு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன எனவும், ஆகவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசு தேவையான நிதிகளை ஒதுக்கி உத்தரவிட வேண்டும் என்றும் தம்பிதுரை வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த அவை முன்னவரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் திமுக அரசை கடுமையாக சாடினார். அவர் பேசும்போது, “தம்பிதுரை மிக முக்கியமான ஒரு பிரச்னையை எழுப்பியுள்ளார். இந்த மழை வெள்ளம் தமிழகத்திலுள்ள திமுக அரசின் தோல்வியை தெளிவாக காட்டியுள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதிலும், உதவிகள் வழங்குவதிலும் திமுக அரசு ஒட்டுமொத்தமாக தோல்வியை சந்தித்துள்ளது. இது ஒரு இயற்கை பேரிடர்தான் என்று மக்களுக்கு தெரியும். ஆனால், மக்களுக்கு உதவிகளை வழங்கும் கடமையில் இருந்து திமுக அரசு தவறியுள்ளது” என்று காட்டமாக குற்றம்சாட்டினார்.