வேங்கைவயல் சம்பவத்தில் உண்மை அறியும் சோதனை: வழக்கு ஜன. 6-க்கு ஒத்திவைப்பு!

வேங்கைவயல் சம்பவத்தில் உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரும் சிபிசிஐடி காவல் துறையினர் மனு மீதான விசாரணையை வரும் ஜன. 6 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீா் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தொடா்பாக விசாரிக்கும் சிபிசிஐடி காவல் துறையினர், சந்தேகத்துக்குரிய 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த அனுமதி கோரி மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனா். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றபோது சிபிசிஐடி காவல்துறையின் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவா் மருத்துவ விடுப்பில் உள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி காவல்துறையின் விசாரணை அதிகாரி தொடர்ந்து விடுப்பில் உள்ளதால் அவகாசம் கோரப்பட்டது. இதனிடையே மனு மீதான விசாரணையை வரும் ஜன. 6-க்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.