எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி நாளை அஞ்சலி செலுத்துகிறார்!

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 36-வது ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்துகிறார்.

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 36-வது ஆண்டு நினைவு தினம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். அதனைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆர். நினைவிட நுழைவு வாயில் அருகே உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதைப்போல், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தவும் அ.தி.மு.க. தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.