அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கத்துக்குட்டி: மத்திய அமைச்சர் எல்.முருகன்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கத்துக்குட்டி என்றும், அமைச்சருக்கான தரத்தை குறைத்துவிட்டார் எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

கோவை – பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவையை இன்று கோவை ரயில் நிலையத்திலிருந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவை – பொள்ளாச்சி வழித்தடத்தில் முன்பதிவு இல்லாத ரயில் சேவை வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்த கோரிக்கையை ரயில்வே அமைச்சரிடம் எடுத்து சென்று ஒரே மாதத்தில் ஒப்புதல் பெற்று ரயில் சேவை தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறை மிகவும் வேகமாக இயங்கி வருகிறது. இந்த ஆண்டு நிதி மட்டும் 6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலைய மேம்பாட்டுக்கு மட்டும் 1,896 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் ரயில் நிலையங்களை உருவாக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவைக்கு மட்டும் 70 கோடி ரூபாய் வரையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அம்ரித் பாரத் திட்டம் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

மேலும், “உதயநிதி ஸ்டாலின் ஒன்றும் கருணாநிதி கிடையாது. இவர் அந்த அளவுக்கான ஆள் கிடையாது. இவர் ஒரு கத்துக்குட்டியாக உள்ளார். அரசியலில் அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. மத்திய அரசோடு இணைந்து வேலை செய்யும்போது தமிழ்நாடு அரசுக்குதான் பலன் கிடைக்கும். அமைச்சருக்கான தரத்தை உதயநிதி ஸ்டாலின் குறைத்துவிட்டார். பக்குவப்பட்ட தலைவராக இருக்க வேண்டும். குதர்க்கமாக பேசக்கூடாது. கேலி, கிண்டலாக பேசி அமைச்சருக்கான தராதரத்தை உதயநிதி குறைத்துவிட்டார்.” எனத் தெரிவித்தார்.

மேலும், கோவை – பெங்களூா் வந்தேபாரத் ரயில் சேவையை, டிசம்பா் 30 ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.