வெள்ள நிவாரண நிதிக்காக ஒரு மாத ஊதியத்தை வழங்கிய தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்!

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத ஊதியம் மொத்தம் 91.34 லட்சம் ரூபாயை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி மற்றும் அரசு தலைமைக் கொறடா கோ.வி.செழியன் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது தி.மு.க. அமைச்சர்களின் ஒரு மாத ஊதியம் மொத்தம் 35 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியம் மொத்தம் 91 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர்.