உள்துறை அமைச்சகத்திடம் சண்டை போட்டு ஹெலிகாப்டர்களை வரவழைத்தவரே நிர்மலா சீதாராமன் தான்: அண்ணாமலை

நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளம் ஏற்பட்டதும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சண்டை போட்டு ஹெலிகாப்டர்களை வரவழைத்தவரே நிர்மலா சீதாராமன் தான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்துக்கு மத்திய அரசு இன்னமும் நிவாரண நிதி வழங்காததது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்த சூழலில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் இதுதொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

அண்ணே.. மத்திய அரசை பொறுத்தவரை ஒரு ஃபார்முலா படி செயல்பட்டு வருகிறது. கண்டிப்பாக வெள்ளச் சேதத்துக்கு மத்திய அரசு நிதி வழங்க தான் போகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மத்திய அரசு நிதி வழங்குவதை நினைத்து திமுக அரசு சந்தோஷப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. இன்னைக்கு இந்த மழை வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் தனது உற்பத்தித் திறனை இழந்து விட்டது.

தூத்துக்குடி எல்லாம் இன்னும் 2 ஆண்டுகளுக்கு தனது உற்பத்தி திறனை கொடுக்க முடியாது. அங்குள்ள உப்பளங்கள் 80 சதவீதம் நாசமாகி விட்டன. இதே மாதிரிதான் மற்ற மாவட்டங்களிலும் நிலைமை இருக்கிறது. ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் தமிழகம் தற்போது மீண்டும் பின்னோக்கி செல்லப் போகிறது. இதை பற்றி எல்லாம் தமிழக அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஏதோ வெள்ளம் வந்துருச்சு.. மக்களுக்கு பணத்தை கொடுத்தோம்.. முடிஞ்சுப் போச்சுனு நினைச்சுட்டு இருக்காங்க. ஆனால் ஒவ்வொரு முறை வெள்ளம் வரும் போது உற்பத்தி திறனில் நாம் பின்னோக்கி போயிட்டு இருக்கோம். எனவே வெள்ளத்தை முன்கூட்டியே சரியாக கையாள தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

“நெல்லை, தூத்துக்குடி வெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என நிர்மலா சீதாராமன் பேசியது தமிழக மக்களை காயப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறதே..” என்று நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “நிர்மலா சீதாராமன் ஏன் தமிழக மக்களை காயப்படுத்த வேண்டும்? அவங்களே இந்த ஊர்க்காரங்க தான். தமிழ் பெண்மணி. இன்னைக்கு நிதியமைச்சராக இருக்காங்க. அவங்க ஏன் நம்ம மக்களை காயப்படுத்த போறாங்க? ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோங்க. நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளம் வந்த போது தமிழக அரசிடம் இருந்து எந்தவொரு கோரிக்கையும் மத்திய அரசுக்கு செல்லவில்லை. ஆனால், நிர்மலா சீதாராமன் உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சென்று, இப்படியொரு பெரிய வெள்ளம் தூத்துக்குடிக்கு வந்திருக்குனு சொல்லி சண்டை போட்டு 5 ஹெலிகாப்டர்களையும், விமானங்களையும் மீட்புப் பணிக்காக இங்கே வர வைத்தார்கள். அதை அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்” என அண்ணாமலை கூறினார்.

மேலும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி எப்போதும், தமிழக மக்களின் நலனை மனதில் கொண்டுள்ளார். அதற்கு கடந்த 9 ஆண்டுகளில் அவர் எடுத்த நடவடிக்கைகளே சான்று. பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் கோபத்தை திசை திருப்பும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மத்திய அரசுக்கு எதிராக மிகைப்படுத்தப்பட்ட கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். கடந்த 2021-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட புயல் தாக்கத்தின்போது அந்த மாநில அரசு கேட்ட ரூ.9 ஆயிரத்து 836 கோடியில், மத்திய அரசு ரூ.ஆயிரம் கோடி வழங்கியது.

மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழகம் 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்றுள்ளது. அதேநேரம், குஜராத் மாநிலத்திற்கு 5 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டன.

கொரோனா பாதிப்பின்போது தமிழக அரசுக்கு மத்திய அரசு ரூ.868 கோடியை மானியமாக வழங்கியது. குஜராத்திற்கு ரூ.304 கோடி மட்டுமே வழங்கியது. இவைகள் சில உதாரணங்கள் மட்டுமே. பிரதமர் மோடி பொறுப்பேற்ற 9 ஆண்டுகளில் மானியங்கள், மத்திய நிதியுதவி திட்டங்கள் உள்பட பல திட்டங்கள் மூலம் தமிழகம் ரூ.10.76 லட்சம் கோடி பெற்றுள்ளது. இது கடந்த 9 ஆண்டுகளில் தமிழகம் அளித்த வரியைவிட 2 மடங்கு அதிகம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.