மணிப்பூர் இருந்து மும்பை வரை ‘பாரத் நியாய யாத்திரை’ செல்கிறார் ராகுல் காந்தி!

மணிப்பூரில் இருந்து மும்பை வரை ‘பாரத் நியாய யாத்திரை’ என்கிற பெயரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி யாத்திரை நடத்தவுள்ளார். வருகிற ஜனவரி 14 முதல் மார்ச் 20 வரை இந்த யாத்திரை நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

நாளை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் கொண்டாட இருப்பதை முன்னிட்டு டெல்லியில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கேசி வேணுகோபால் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கேசி வேணுகோபால் ராகுல் காந்தியின் யாத்திரை குறித்த தகவலை வெளிப்படுத்தினார். கேசி வேணுகோபால் கூறியதாவது:-

ஜனவரி 14 முதல் மார்ச் 20 வரை மணிப்பூரில் இருந்து மும்பை வரை ‘பாரத் நியாய யாத்திரை’ நடத்த அகில இந்திய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையின் அனுபவத்துடன் ராகுல் காந்தி தற்போது பாரத் நியாய யாத்திரையை மேற்கொள்ளவிருக்கிறார். இந்த யாத்திரை மூலம் இளைஞர்கள், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுடன் கலந்துரையாட உள்ளார்.

பாரத் ஜோடோ யாத்திரையின் போது 4,500 கி.மீ பயணம் செய்த ராகுல், தற்போது இந்த யாத்திரையில் 6,200 கிமீ தூரம் பயணிக்க உள்ளார். இம்முறை மணிப்பூர், நாகாலாந்து, அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், பிகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணம் செய்கிறார். மொத்தமாக இந்த யாத்திரையின் மூலம் 14 மாநிலங்களுக்கும் அதில் உள்ள 85 மாவட்டங்களுக்குச் செல்லவிருக்கிறார். ஆனால் பாரத் ஜோடோ போல் நடைபயணமாக இல்லாமல், இம்முறை பேருந்து மூலம் யாத்திரை நடத்தப்படும். பேருந்து யாத்திரை என்றாலும் நடைப்பயணங்களும் இருக்கும்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஜனவரி 14ம் தேதி இந்த யாத்திரையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த யாத்திரை கிழக்கு-மேற்கு மாநிலங்களை மையமாக கொண்டு நடைபெறும். நாங்கள் ஏற்கனவே பாரத் ஜோடோ யாத்திரையின் மூலம் தெற்கு-வடக்கு மாநிலங்களுக்கு செல்லவுள்ளோம். மணிப்பூர் இல்லாமல் எப்படி யாத்திரை செய்ய முடியும்?. மணிப்பூர் மக்களின் வலியைக் குணப்படுத்த முயற்சிக்க வேண்டும். இவ்வாறு கேசி வேணுகோபால் கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை அல்லது இந்திய ஒற்றுமை யாத்திரை என்கிற பெயரில் யாத்திரை மேற்கொண்டார். கடந்த 2022 செப்டம்பர் 7-ல் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி ஜனவரி 2023-ல் ஸ்ரீநகரில் நிறைவுபெற்றது இந்த யாத்திரை. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து யாத்திரையைத் தொடங்கி வைத்தார். மத்தியில் ஆளும் பாஜகவின் பிரிவினைவாத அரசியலுக்கு எதிராகவும், சமத்துவமின்மை, வேலை வாய்ப்பின்மை போன்ற சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்காகவுமே இந்திய ஒற்றுமை யாத்திரையை ராகுல் காந்தி நடத்தியதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

2022-ம் ஆண்டு செப். 7ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து யாத்திரை தொடங்கியது. அங்கிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், வழியாக 4,080 கிமீ பயணித்து 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைக் கடந்து ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்தது. இந்த யாத்திரை முழுவதும் ராகுல் காந்தி, 12 பொதுக்கூட்டங்கள், 100க்கும் அதிகமான தெருமுனைக் கூட்டங்கள், 13 பத்திரிகையாளர்கள் சந்திப்பு, 275க்கும் அதிகமான திட்டமிடப்பட்ட நடைபயண உரையாடல்கள், 100 க்கும் அதிகமான தனிஉரையாடல்கள் ஆகியவற்றில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.