தமிழ்நாடு முழுவதும் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் ஐடி ரெய்டு!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசு ஒப்பந்த தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் அரசு ஒப்பந்தம் தனியார் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில், அண்ணாநகர், அமைந்தகரை, எழும்பூர் என 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிஎம்கே புரொஜெக்ட் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் சென்னை அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் செயல்பட்டு வரும் சிஎம்கே புரொஜெக்ட் நிறுவனத்துக்கு சொந்தமான கார்ப்பரேட் அலுவலகத்தில் 5க்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

சிஎம்கே நிறுவனம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு இடம், பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் உள்ள கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன் கேரளா மாநிலம் கொச்சியிலுள்ள வருமான வரித்துறை அலுவலக கட்டுமான பணிகளையும், ரயில்வே மற்றும் மெட்ரோ பணிகளையும் இந்த நிறுவனம் கையாண்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிஎம்கே நிறுவனத்துக்கு சொந்தமாக கோவையில் அமைந்திருக்கும் க்ரீன் ஃபீல்ட் ஹவுசிங் இந்தியா என்கிற ஏற்றுமதி நிறுவனத்திலும், சிஎம்கே புரொமோட்டர்ஸ் நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிறுவனம் அரசு கட்டுமான ஒப்பந்தங்களை மேற்கொண்டு முரையாக வருமான வரி செலுத்தவில்லை என குற்றச்சாட்டை முன் வைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.