ஜனவரி 19 ஆம் தேதி திருப்பூர் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 19 ஆம் தேதி திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

கேலோ இந்தியா இளைஞர் 2024 விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் வரும் ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. சென்னையில் நடைபெறும் தொடக்க விழாவில் பங்கேற்க வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து கேலோ இந்தியா போட்டியைத் தொடங்கிவைக்க வருகை தரும் பிரதமர் மோடி பிற்பகலில் திருப்பூருக்கு வருகை தரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருமுருகன்பூண்டியில் புதியதாகக் கட்டடப்பட்டும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதால் மருத்துவமனை திறப்பு விழாவில் அவர் பங்கேற்கவுள்ளதாகவும், இதன் பின்னர் பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசுகிறார். இதற்காக திருப்பூர் பி.என்.சாலை, ஆண்டிபாளையம், மாதப்பூர் ஆகிய 3 இடங்களில் ஒரு இடத்தைத் தேர்வு செய்யவுள்ளதாக பாஜக வடக்கு மாவட்டத் தலைவர் பி.செந்தில்வேல் தெரிவித்துள்ளார். எனினும், அவர் வருகை தரும் நேரம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் தொடர்பாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.