ஆதித்யா எல் 1 வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ராமதாஸ் வாழ்த்து!

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் ஆர்பிட்டில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் ஆர்பிட்டில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. இந்த வெற்றிக்கு பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவரும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் இது குறித்து ராமதாஸ் கூறியுள்ளதாவது:-

சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து கடந்த செப்டம்பர் 2-ஆம் நாள் பி.எஸ்.எல்.வி ஏவுகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் 125 நாள் பயணத்திற்குப் பிறகு, பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள எல் 1 புள்ளியை அடைந்து ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல். இதற்கு காரணமான இஸ்ரோ அமைப்புக்கும், அதன் விஞ்ஞானிகளுக்கும் என வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்திரயான் திட்டத்தின் மூலம் நிலவை வென்ற நமது அறிவியலாளர்கள் இப்போது ஆதித்யா எல் 1 திட்டத்தின் மூலம் சூரியனை நெருங்கியுள்ளனர். சூரியன் குறித்த உண்மைகளும் இனி நமக்கு புலப்படும். வானத்தையும், நிலவையும் வசப்படுத்திய நாம், இனி சூரியனையும் சொந்தமாக்கிக் கொள்வோம். இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைகள் தொடர மீண்டும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.