வங்கதேச தேர்தலில் வாக்களித்தார் பிரதமர் ஷேக் ஹசீனா!

வங்கதேச பொதுத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது. டாக்காவில் உள்ள ஓட்டுச்சாவடியில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ஓட்டுப்பதிவு செய்தார்.

வங்கதேச பொதுத்தேர்தலில் 12 கோடி பேர் ஓட்டளிக்கவுள்ள நிலையில், 25 கட்சிகளை சேர்ந்த சுமார் 1,500 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வங்கதேச நாட்டில் அவாமி லீக் கட்சி ஆட்சி நடக்கிறது. பிரதமராக ஷேக் ஹசீனா உள்ளார். இவரது பதவி காலம் நிறைவடைந்ததையடுத்து, நாட்டின் 12 வது பொதுத்தேர்தல் இன்று(ஜன.,07) காலை துவங்கியது. தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி தேர்தலை புறக்கணித்துள்ளது. தேர்தலை நிறுத்த வலியுறுத்தி ஜன.,08 வரை 48 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு எதிர்க்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. தேர்தலில் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை பெறும் , ஷேக் ஹசீனா நான்காவது முறையாக பிரதமராக வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் ஷேக் ஹசீனா நிருபர்கள் சந்திப்பில்,” இந்தியாவை போன்ற நம்பகமான நண்பனை பெற்றிருப்பது வங்கதேசத்தின் அதிர்ஷ்டம். நாட்டில் ஜனநாயகம் தொடர்ந்து நிலவுவதை உறுதி செய்ய அரசு விரும்புகிறது.
நிலையான ஜனநாயகம் இல்லாத நாடு ஒருபோதும் முன்னேற முடியாது. எங்கள் நாடு இறையாண்மை மற்றும் சுதந்திரமானது. நாம் ஒரு சிறிய நாடாக இருக்கலாம், ஆனால் நம்மிடம் பெரிய மக்கள் தொகை உள்ளது” என கூறினார்.