அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு தடை கோரிய மனு மீது நாளை விசாரணை!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை நாளை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் பா. ராம்குமார் ஆதித்தன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று காலை நேரில் அஜராகி கூறுகையில், “போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகை காலங்கள் நெருங்கி வரக் கூடிய சூழலில் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பது சட்டவிரோதம். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக அவசர வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்றார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் நாளை இந்த வழக்கு முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர்.