அவசர மனுவாக விசாரிக்க கோரிய ஸ்டெர்லைட் ஆலை கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் நிராகரிப்பு!

அவசர மனுவாக விசாரிக்க கோரிய ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்த வழக்கின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். ஆலையின் உள்ளே பராமரிப்பு பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் தரப்பில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், ‘ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலையால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பு பெறும் நிலை உள்ளது. அதனால் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை விரைந்து பட்டியலிட்டு விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, ‘அரசியல் சாசன அமர்வில் நிறைய வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மனுவை உடனடியாக பட்டியலிட முடியாது. இருப்பினும் இம்மாத இறுதியில் ஏதாவது ஒருநாள் வழக்கை விசாரிக்க முயற்சிக்கிறோம்’ என உத்தரவிட்டார்.