ரயில்வே வேலைக்கு நிலம்: ராப்ரி தேவி, மிசா பாரதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கியது தொடர்பான வழக்கில் பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, அவரது மகள் மிசா பாரதி பெயரில் முதல் குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை இன்று தாக்கல் செய்தது.

இந்தக் குற்றப்பத்திரிகையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் குடும்பத்துக்கு நெருக்கமானவராக அறியப்படும் அமித் கத்யால், சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள பணமோசடி தடுப்பு சட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை இன்று இந்த குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கு விசாரணையை ஜனவரி 16-ம் தேதி பட்டியலிட்டுள்ளது.

ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கியது தொடர்பான வழக்கு விசாரணையில் பணமோசடி தொடர்பாக அமித் கத்யால் நவம்பர் மாதம் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் லாலு பிரசாத் மற்றும் அவரது மகனும், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இருவருக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி வைத்துள்ளது.

முன்னதாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது இந்திய ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ‘குரூப் டி’ பதவிகளுக்கு பல்வேறு நபர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு வேலை வழங்க லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.