கிழக்கு லடாக் எல்லையில் நிலைமை சீராக இல்லை: ராணுவ தளபதி!

கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அமைந்துள்ள எல்லைப்பகுதியில் நிலைமை சீராக இல்லை என்றும் அங்கு பதற்றம் நீடிப்பதாகவும் வடக்கு ராணுவ படைப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆயுதப்படை வீரர்களின் தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதில் பங்கேற்க ஸ்ரீநகர் வந்திருந்த வடக்கு ராணுவ படைப்பிரிவு தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்தியா சீனா கடந்த 2020ம் ஆண்டு முதல் மோதலில் ஈடுபட்டுள்ள 7 பதற்றம் நிறைந்த பகுதிகளில் 5க்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. அதே நேரம் கிழக்கு லடாக்கின் வடக்கு எல்லைப் பகுதியின் நிலைமை ஸ்திரமாக இருப்பதாக தோன்றினாலும், நிலைமை சீராக இல்லை. ஒரு வித பதற்றம் நிலவுகிறது,’’ என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறிய போது, ‘’பூஞ்ச்-ரஜோரி பிராந்தியத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் பிடிக்காததால் அண்டை நாடு தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது,’’ என்று பாகிஸ்தானை குறிப்பிட்டு பேசினார்.