29ம் தேதி ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. வருகிற 29ம் தேதி ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும், இதுவே அவருக்கு கடைசி வாய்ப்பு என்றும் நீதிபதி பூர்ணிமா எச்சரித்துள்ளார்.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு 3 வருட ஜெயில் தண்டனை விதித்து, விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்திருந்தது. மேலும், புகார் அளிக்க சென்ற அந்த பெண் அதிகாரியின் காரை மறித்ததாக முன்னாள் எஸ்.பி., கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பினை எதிர்த்து ராஜேஷ்தாஸ், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.. இந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஜனவரி 6ம் தேதி அறிவிக்கப்படும் என்று விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்னமேயே அறிவித்திருந்தது.

மேலும், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாதிடுவதை தான் தவிர்ப்பது போன்ற எதிர்மறையான எண்ணம், முதன்மை அமர்வு நீதிபதி மனதில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தனது தரப்பு வாதங்களை முன் வைக்க அவகாசம் கேட்ட நிலையில் அமர்வு நீதிபதி, தீர்ப்பை தள்ளிவைத்துள்ளதாகவும், அதனால் வழக்கை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தால் தனக்கு நியாயம் கிடைக்காது என்பதால், விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். உயர்நீதிமன்றம் உத்தரவிடும் வரை அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த ஹைகோர்ட் நீதிபதி, வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியாது என்றும் விழுப்புரம் கோர்ட், இந்த வழக்கை ஜனவரி 24க்குள் விசாரித்து, தீர்ப்பளிக்கவும் உத்தரவிட்டார்.. இதையொட்டி, மேல்முறையீட்டு வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் உத்தரவு வரும் வரை விசாரணையை ஒத்திவைக்க கோரினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி பூர்ணிமா, “ஹைகோர்ட் உத்தரவின்படி, வரும் 24ம் தேதிக்குள் வழக்கை முடிக்க வேண்டும். அதனால் வழக்கின் விசாரணையை 22ம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் சுப்ரீம் கோர்ட் உத்தரவை சமர்ப்பிக்கலாம். இல்லாவிட்டால், உங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும்” என்று முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்புக்கு உத்தரவிட்டார். எனவே, இன்றைய தினம் விசாரணை நடக்க போவதால், மிகுந்த பரபரப்பு கூடிவருகிறது.

ஆனால், இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்தார்.. ராஜேஷ் தாசின் கோரிக்கையில் எந்த முகாந்திரமும் இல்லை.. அதனால், விழுப்புரம் நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க எந்த தடையும் இல்லை என்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வரும் 29ம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும், இதுவே அவருக்கு வாதாட கடைசி வாய்ப்பு என்றும் நீதிபதி பூர்ணிமா எச்சரித்துள்ளார்.