டெல்லியில் போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி!

75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அங்கிருந்த குறிப்பேட்டில் பிரதமர் மோடி தனது அஞ்சலிக் குறிப்பினை பதிவிட்டார். தொடர்ந்து அங்கிருந்து குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் கர்தவ்ய பாதைக்கு சென்றார். குடியரசு தின விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வண்ணமயமான தலைப்பாகையுடன் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தார். பிரதமரைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் அவரது மனைவியுடன் விழாவுக்கு வருகை தந்தார்.

பின்னர் குடியரசு அதிபர் மாளிகையில் இருந்து பிரத்யேக குதிரை வாகனத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வந்தார். அவரது வாகனத்துக்கு முன்பும், பின்பும் குதிரையில் வீரர்கள் அமர்ந்து வந்தனர். அவருடன் பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான், அவரது மனைவியும் சாரட் வண்டியில் வந்தனர். அவர்களைப் பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர், முப்படை தளபதிகள் வரவேற்றனர்.

குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. புதுடெல்லி 28 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அணிவகுப்பு நடைபெறும் கடமைப் பாதைமற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் 14,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். டெல்லி முழுவதும் 70 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குடியரசு தின விழாவில் சுமார் 77,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு சோதனைகளுக்காக காலை 8 மணிக்கே விழா நடைபெறும் இடத்துக்கு அவர்கள் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உதவ ஆங்காங்கே சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும் 1,300 விமானங்கள் இயக்கப்படுகின்றன. குடியரசு தின விழா நடைபெறும் காலை 10.20 முதல் 12.45 மணி வரை விமானங்கள் புறப்பட, தரையிறங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமானப் படை விமானங்கள், ஆளுநர், முதல்வர் பயணம் செய்யும் விமானங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

முன்னெச்சரிக்கையாக டெல்லிவான் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. டெல்லி ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களில் இருஅடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. டெல்லி முழுவதும் உள்ள ஓட்டல்கள், விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.