மதுரையைச் சேர்ந்த பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கி கவுரவிப்பு!

அரசு பள்ளியை மேம்படுத்த ரூ.7 கோடி மதிப்புடைய தனது நிலத்தை தானமாக வழங்கிய மதுரையை சேர்ந்த ஆயி எனும் பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டிருக்கிறது.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகில் உள்ள யா.கொடிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆயி எனப்படும் பூரணம் அம்மாள். கனரா வங்கியில் உதவியாளராக பணியாற்றி வந்த இவருடைய கணவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். வாரிசு அடிப்படையில் அவருடைய பணி பூரணம் அம்மாளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. உதவியாளர் பணியை செய்துகொண்டு தனது ஒரேயொரு மகளான ஜனனியை வளர்த்து வந்திருக்கிறார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மகள் ஜனனி உயிரிழந்துவிட்டார். உயிரிழக்கும்போது பாரம்பரிய நிலத்தை, கொடிக்குளம் அரசு பள்ளியை மேம்படுத்த தானமாக வழங்க வேண்டும் என்று கூறியிருந்திருக்கிறார். எனவே ஆயி அம்மாள் ஜனனியின் நினைவாக அரசு பள்ளியை தரம் உயர்த்த ரூபாய் 4.50 கோடி மதிப்பில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை பள்ளி கல்வித்துறைக்கு இலவசமாக கொடுத்திருக்கிறார். இதனுடைய சந்தை மதிப்பு 7.50 கோடி.

சாமானிய குடும்பத்தை சேர்ந்த பெண்மணி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு பெறும் நிலத்தை கொடையாக கொடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது கொடைக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மதுரை எம்பி சு.வெங்கடேசன் எம்பி, பூரணம் அம்மாளை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார். இவரை தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸும் வாழ்த்துகளை கூறியிருந்தார். அதேபோல அவரது கொடையை பாராட்டியிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்குகிறார் ஆயி அம்மாள்” என நெகிழ்ச்சி தெரிவித்திருந்தார். மேலும், “கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம். ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இன்று சென்னையில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் அவருக்கு முதலமைச்சர் விருது வழங்கி கவுரவித்தார். விருது பெற்ற பூரணம் அம்மாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த பள்ளி தொடக்கத்தில் ஆரம்ப பள்ளியாகத்தான் இருந்தது. பின்னர் இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்டு நடுநிலை பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இதனை உயர்நிலை பள்ளியாக மேலும் தரம் உயர்த்ததான் நான் நிலத்தை வழங்கியிருக்கிறேன். இந்த ஆண்டிலேயே இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்டு பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய மகள் இப்போது உயிருடன் இல்லை. கணவரும் முன்பே இறந்துவிட்டார். இருப்பினும் ஒரு தனி பெண்ணாக நான் இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு, ஏராளமான சிரமங்களை எதிர்கொண்டு வாழ்க்கையில் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். இதேபோல ஒவ்வொரு பெண்ணும் விடா முயற்சியோடு போராடி, கல்வியின் துணையுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று” கேட்டுக்கொண்டிருக்கிறார் பூரணம் அம்மாள்.