ஆளுநருக்கு எவ்ளோ வன்மம் பாருங்க: மு.க.ஸ்டாலின் கண்டனம்!

மகாத்மா காந்தி குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மகாத்மா காந்தியின் நினைவு நாள் வரும் 30ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட உள்ளது. சில நாட்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “1942ஆம் ஆண்டுக்குப் பிறகு காந்தியின் சுதந்திர போராட்டம் பலன் அளிக்கவில்லை” என்று தெரிவித்தது சர்ச்சையை உண்டாக்கியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்த நிலையில் ஆளுநர் விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “என்னுடைய மதத்தின் மீது சூளுரைத்து சொல்கிறேன், என் மதத்துக்காக உயிர் துறக்கவும் தயார், ஆனால் அது எனது சொந்த விவகாரம். அதில், அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்னவர் மகாத்மா காந்தியடிகள். தன்னை இந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டவர், அதே நேரம் தன்னைப் போலவே அனைத்து மதத்தவர் உணர்வுக்கும் மரியாதை கொடுத்தவர், அனைத்து மதங்களுமே ஒரே நோக்கம் கொண்டவை என்றவர் அவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றை மதவாத தேசியவாதத்தை காந்தி ஏற்கவில்லை என்றும், அதனாலேயே மதவெறிக்கு அவர் பலியானார் என்றும், 75 ஆண்டுகள் ஆன பின்னரும் காந்தி மீதான கோபம், வகுப்புவாதிகளுக்கு குறையவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் காந்தியாரை வலதுசாரி சக்திகள் இழிவுபடுத்துவது தொடர்கதையாக உள்ளது என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

காந்தியால் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பதும் இதே வன்மம் கலந்த நோக்கத்துடன்தான் என்ற முதலமைச்சர், “தேசத் தந்தை என போற்றப்படும் காந்தியடிகளை, பொய்களாலும் அவதூறுகளாலும் கொச்சைப்படுத்தும் காலமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவரது கொள்கைகள் மட்டுமல்ல, அவரே இழிவுபடுத்தப்படுகிறார். நிகழ்காலம் எவ்வளவு வகுப்புவாதச் சகதியில் சிக்கி இருக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும். இதனை உடனே தடுத்தாக வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

மத நல்லிணக்கத்தின் அடையாளமான காந்தியடிகள் மத வெறியர்களால் கொல்லப்பட்ட ஜனவரி 30ஆம் தேதியை நாடு முழுவதும் மத நல்லிணக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும் என்ற அவர், குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இந்தக் கடமை அதிகம் இருக்கிறது என்றும், எனவே ஜனவரி 30ஆம் நாளன்று மத நல்லிணக்க உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை ஜனவரி 30 அன்று மாவட்டக் கழகங்கள் நடத்திட வேண்டும். இதில் அனைத்து மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவினர் வலியுறுத்தி உள்ளார்.